மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.. மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிஷ்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அஸ்ஸாமிற்கு மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கூறியது.
8கட்டமாக தேர்தல்
ஆனால் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் இந்த முறை 8 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக மார்ச் 27 ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 2 ஆம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 1 ஆம்தேதியும், 3 ஆம் கட்டமாக ஏப்ரல் 6 ஆம்தேதியும் 4 ஆம் கட்டமாக ஏப்ரல் 10 ஆம்தேதி 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
8ம் கட்ட தேர்தல்
ஏப்ரல் 17 ல் ஐந்தாம் கட்டமாகவும், ஏப்ரல் 22 ஆறாம் கட்டமாகவும், ஏப்ரல் 26 ஆம்தேதி ஏழாம் கட்டமாகவும், ஏப்ரல் 29 ஆம் தேதி 8 ஆம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை
தேர்தல் நேரத்தில் வன்முறை நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தலை மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளதாக கூறியுள்ளது, ஆனால் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வங்கத்தின் மகள்
மம்தா கூறுகையில், பிற மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் மோடியும் அமித் ஷாவும் விரிவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாகவே இவ்வாறு தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் பாஜக எவ்வளவு தந்திரங்களை மேற்கொண்டாலும் தேர்தலில் தாங்கள்தான் ஜெயிக்கப்போகிறோம். நான் வங்கத்தின் மகள். மண்ணின் மக்களை பற்றி பாஜகவை விட நான் அதிகம் அறிந்து வைத்திருக்கிறேன்