குஜராத் சட்டசபை வாக்குப் பதிவு தேதி அறிவிப்பில் தாமதம்: மாஜி தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் அதிருப்தி
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதியை அறிவிக்காமல் இழுத்தடிப்பதற்கு மாஜி தேர்தல் ஆணையர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டெல்லி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதியை அறிவிக்காததற்கு முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரத்தில் குஜராத்தில் வெள்ளி நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக கூறி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு சர்ச்சையை தேர்தல் ஆணையம் தவிர்த்திருக்க வேண்டும். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை ஒருவாரம் முன்னரோ அல்லது பின்னரோ நடத்துவதாக அறிவித்திருக்க வேண்டும்.
இதற்கு நிர்வாக ரீதியாக தீர்வு காண முடியும்தான். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வது அதிகாரிகள்தானே தவிர அரசியல்வாதிகள் அல்ல. அவசரகால பணிகளை தேர்தல் நடைமுறைகள் கட்டுப்படுத்தாது.
அதேபோல் ஏற்கனவே நடைமுறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் தேர்தல் நடத்தை விதிகள் தடை விதிக்காது. புதிய அறிவிப்புகள்தான் எதுவும் தேர்தல் நடத்தை விதிகள் காலத்தில் அமல்படுத்த முடியாது.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
அதேபோல் பெயரை வெளியிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட குஜராத்தில் நிகழ்ந்துவிடவில்லை. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட்டதுதானே என காட்டமாக கூறியுள்ளார்.