ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு ஆக.9ல் தேர்தல்.. வேட்பாளரை களமிறக்குமா அதிமுக?
ஆகஸ்ட் 9 ஆம் தேதி ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் என்று துணை குடியரசுத் தலைவரும் அவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும், ராஜ்யசபாவின் துணை தலைவராக இருந்துவந்த குரியன் ஜோசப் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ராஜ்யசபா துணை தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது. அதனால், ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஆகஸ்ட் 8 ஆம் தேதி ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு அறிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஜோசப் குரியன் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ராஜ்ய சபாவின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். இவருடைய பதவிக்காலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நிறைவடைந்தது. ஜோசப் குரியன் இதற்கு முன்பு 2 முறை லோக்சபா எம்பியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கான போட்டியில் அதிமுக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் சமீபத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சியின் உயர்மட்ட குழு கூடி முடிவு செய்யும் என கூறியிருந்தார்.