நாட்டில் மத கலவரத்தை உருவாக்க சதி நடக்கிறது: பாஜக கூட்டத்தில் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: தேர்தலில் படுதோல்வியடைந்தவர்கள் நாட்டில் மத கலவரத்தை உருவாக்க முயற்சி செய்துகொண்டுள்ளார்கள் என்று பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று காலை துவங்கியது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, முத்த தலைவர் அத்வானி, உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர் .
இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் பொறுப்பை அமித் ஷாவிடம் வழங்குவதாக ராஜ்நாத் சிங் முறைப்படி அறிவித்தார். இதன்பிறகு ராஜ்நாத்சிங், அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உரையாற்றினர்.
பிரதமர் நரேந்திரமோடி நிறைவு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கேப்டன் ராஜ்நாத்சிங். ஆனால் ஆட்ட நாயகன் அமித்ஷா. நாட்டு மக்கள் தங்கள் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர். இப்போது மக்களுக்கு கடமையாற்றும் கட்டாயம் நமக்கு வந்துள்ளது. இது நமது முறை.
ஆட்சிக்கு வந்தது முதல் பழைய ஆட்சியின் தவறுகளை களைவதிலேயே நேரம் வீணாகிக் கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள பணி நடைமுறையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். விரைவிலேயே நடைமுறையை மாற்றி, பாஜக தனது வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
இந்தியாவை பற்றிய உலகின் பார்வை தற்போது வேகமாக மாறிவருகிறது. மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் இந்தியாவில் அரசு அமைந்துள்ளதுதான் இதற்கு காரணம். கடந்த 60 நாட்களில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாடு வியத்தகு அளவுக்கு மேம்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டு வளர்ச்சிக்கான ஒரு கருப்பொருளை பாஜக வெளியிட உள்ளது. மின்சாரம், கழிவறை, பெண்குழந்தைகளுக்கு கல்வி என்று பல தலைப்புகளில் ஆண்டுக்கு ஒரு கருப்பொருளை எடுத்து அதற்காக முக்கியத்துவம் கொடுத்து உழைக்கப்படும்.
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாஜக அரசின் கொள்கை. விவசாயிகள் நலனை அரசு தூக்கி பிடித்ததால்தான் உலக வர்த்தக அமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும், விவசாயிகள் நலனை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று இந்தியா கூறிவிட்டது. புதிய இந்தியாவை உலகம் இப்போது பார்த்துக்கொண்டுள்ளது.
நாட்டில் அமைதி நிலவினால்தான் முன்னேற்றம் காண முடியும். ஆனால், தேர்தலில் அடைந்த மிகப்பெரும் தோல்வியால் துவண்டுள்ளவர்கள் மத ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நாடு, ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாது.இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.