காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? விரைவில் சட்டசபை தேர்தல்.. மத்திய அரசு முடிவுக்கு..காரணம் என்ன
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிப்பது, சட்டசபைத் தேர்தலை நடத்துவது ஆகியவற்றுக்குத் தேவையான பணிகளை மத்திய அரசு மிக விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் வகையிலிருந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. தற்போது வரை மத்திய அரசின் இந்த செயல் சரியானது தானா என்பது குறித்த விவாதங்கள் தற்போது வரை தொடர்கிறது.
மீண்டும் தேர்தல்
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கவும் அங்குத் தேர்தலை நடத்தவும் தேவையான பணிகளில் மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக காஷ்மீரிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், காஷ்மீரில் ஏழு மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி (PAGD) பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெஹபூபா முப்தியின் ஆட்சி முடிவுக்கு வந்ததது. அதன் பிறகு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் காஷ்மீரில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமலேயே இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டே மக்களவை தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
விரைவில் பேச்சுவார்த்தை
ஆனால், பாதுகாப்பு காரணங்கள் இருப்பதால், காஷ்மீரில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டசபைத் தேர்தலை நடத்தும் திட்டமில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் மத்திய அரசு, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, சட்டசபைத் தேர்தலை நடத்துவது ஆகியவை குறித்து அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கட்சிகள் ஆதரவு
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அங்குள்ள ஏழு கட்சிகள் ஒன்றாக இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் குப்கர் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கியது. இருப்பினும், கட்சித் தலைவர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில மாதங்களாக இந்த கூட்டணி எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருந்தன. இதைச் சரி செய்யும் முயற்சிகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
காரணம் என்ன
காஷ்மீரிலுள்ள கைதுகளை விடுவிப்பது, 4ஜி இணையச் சேவையை மீண்டும் வழங்குவது, அங்குத் தேர்தலை நடத்தத் தேவையான பணிகளைத் தொடங்குவது உள்ளிட்ட பணிகளை இந்தியா அரசு தொடங்க வேண்டும் என பைடன் நிர்வாகத்திலுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் நிர்வாகி டீன் தாம்சன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே காஷ்மீரில் தேர்தலை நடத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.