அப்போ கன்பார்மா.. மமதாவுடன் கிஷோர் மீண்டும் சந்திப்பு.. பாஜகவுக்கு இருக்கு சவால்!
கொல்கத்தா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
வியூக நிபுணர்கள் என்று அழைக்கப்படும் ஸ்டாட்டர்ஜிஸ்ட்களின் கருத்துகள் தற்போது அனைத்து துறைகளிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்க தேர்தலிலிருந்து உள்ளூர் தேர்தல் வரை இந்த ஸ்டாட்டர்ஜிஸ்ட்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான தேர்தல் வியூக நிபுணராக கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும் 2014 லோக்சபா தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க பணியாற்றினார். 2019 ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார். அந்த கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்தநிலையில், கிஷோர் மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜியை அம்மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அவருடன் டி.எம்.சி எம்.பி.யும், மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியும் உடனிருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கிஷோர் இணைந்து பணியாற்றுவதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வியூகங்கள் குறித்து வரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்காளத்தில் 18 இடங்களை கைப்பற்றிய பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காட்டிலும், 4 இடங்கள் மட்டும் குறைவு. எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற திரிணாமுல் காங்கிரஸ் களப்பணியில் இறங்கி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் விரைவில் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.