மின்வாரிய ஊழியருக்கு கூரியரில் வந்த நாக பாம்பு! கள்ளக்காதலியின் கணவன் அனுப்பிய வார்னிங்
பெங்களூர்: "அடுத்தவர் பொண்டாட்டிய விட்டு விலகாவிட்டால் நீ பாம்பு கடித்து சாக வேண்டியிருக்கும்" என்ற எச்சரிக்கை வாசகத்துடன், பெங்களூர் மின்வாரிய ஊழியருக்கு, விஷப்பாம்பையும் கூரியரில் அனுப்பி வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூர் மின்சார சப்ளை வாரியத்தில் (பெஸ்காம்) கிளர்க்காக பணியாற்றுபவர் கெய்த் டி சில்வா (40). சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு வந்த கூரியர் பார்சல் ஒன்றை பிரித்தபோது, உள்ளே சுருண்ட நிலையில் நாக பாம்பு ஒன்று இருந்துள்ளது. பயந்துபோன டி சில்வா, பார்சலை தூக்கி வெளியே போட்டார்.
அப்போது பார்சலுக்குள் இருந்து ஒரு கடிதம் விழுந்துள்ளது. அதில், "உன் ஆபீசில் வேலை பார்க்கும் திருமணமான பெண்ணை விட்டு விலகிவிடு. அல்லது பாம்பு கடித்து சாவாய்" என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த டி சில்வா, ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், வழக்கில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. போலீசாரிடம், பெயரில்லாமல் வந்த கடிதமும், கூரியர் பாக்சும்தான் உள்ளதே தவிர, முக்கிய ஆதாரமான பாம்பு சிக்கவில்லை. அது எங்கோ ஓடிவிட்டது. வழக்கு கோர்ட்டுக்கு செல்லும்போது, மிரட்டலுக்காக பயன்படுத்தப்பட்ட, பாம்பையும், ஆஜர்படுத்த வேண்டியது கட்டாயம். பாம்பு இல்லாமல் கேஸ் நிற்காது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
இதனிடையே, டி சில்வா ஆபீசில் வேலை பார்க்கும் திருமணமான பெண்களில் யாருடைய கணவரோதான் இந்த காரியத்தை செய்திருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. டிசில்வாவுடன் நெருக்கமாக பழகும் பெண்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.