சைக்கிளில் சவாரி.. கூடவே 'நமக்கு நாமே' மின்சாரமும் தயாரிச்சுக்கலாம்.. இந்தியக் கோடீஸ்வரரின் ஐடியா!
டெல்லி: சைக்கிளை இயக்கி நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிப்பதற்கான எளிய வழியைக் கண்டுபிடித்துள்ளார் இந்தியா அமெரிக்க வம்சாளியை சேர்ந்த கோடீஸ்வரரான மனோஜ் பார்கவா.
மின்சாரம் இன்றி நமது அன்றாட வேலைகளில் பாதிக்குப் பாதி வேலைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்வது கடினம். ஆனால், உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால் நாளுக்கு நாள் மின் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மின் தடைகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை வீடுகளுக்கும் அறிமுகப் படுத்தப் பட்டு வருகிறது. ஆனால், இந்த முறையால் மழை காலங்களில் மின்சாரம் பெற இயலாது.
நமக்கு நாமே...
இந்த நிலையில் மிக எளிய முறையில் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் சைக்கிள் ஒன்றை இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரரான மனோஜ் பார்கவா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்திய அமெரிக்க வம்சாவளி...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம் 1960 களில் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தது. அங்கே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பிய மனோஜ், 12 ஆண்டுகள் டெல்லியில் இருக்கும் ஹன்ஸ்லோக் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். பின்னர் அப்பாவின் பிளாஸ்டிக் நிறுவனங்களை நிர்வகிக்க மீண்டும் அமெரிக்கா சென்றார் அவர்.
இலவச மின்சாரம்...
தற்போது பார்கவாவின் நிறுவன மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் 99 சதவிகிதத்தை, உலகின் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கச் செலவழிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். அவற்றில் ஒன்று தான் இந்த 'இலவச மின்சார' திட்டம்.
ஹைபிரிட் பைசைக்கிள்...
மனோஜ் தனது குழுவினருடன் சேர்ந்து கண்டுபிடித்திருக்கும் இந்த மின்சாரம் தயாரிக்கும் சைக்கிள் "ஹைபிரிட் பைசைக்கிள்" என அழைக்கப்படுகிறது. இதில், ஒரு மணி நேரம் பெடல் செய்தால், ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள்.
சிறப்பம்சம்...
இந்த சைக்கிளின் சிறப்பம்சம் என்னவென்றால், மின்சாரம் தயாரிக்கும் போது இதிலிருந்து எந்தவிதமான மாசு ஏற்படுத்தும் கழிவுகளும் வெளியாகாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்வதால் பணமும் மிச்சமாகிறது.
ஜெனரேட்டராகும் சக்கரம்...
தனது இந்தக் கண்டுபிடிப்பு குறித்து மனோஜ் கூறுகையில், "இந்த சைக்கிள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த சைக்கிளின் பெடலை இயக்குவதன் மூலம், சக்கரம் ஜெனரேட்டராக மாறி, மின்சாரம் உற்பத்தி செய்யும். இதில் கிடைக்கும் மின்சாரம், சைக்கிளில் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்யும் .
விலை குறைவு...
அடுத்த வருடம் மார்ச் முதல் இந்த சைக்கிள் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரமாக இருக்கும்.
சுற்றுச்சூழல் பாதிப்பில்லை...
இந்த சைக்கிளை ஒரு மணி நேரம் இயக்குவதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம், கிராமப்புறங்களில் 24 மணி நேரம் பயன்படுத்த முடியும். ஒரு சிறிய விளக்கு, மின்விசிறி, போன் சார்ஜ் செய்தல் ஆகியவை நாள் முழுவதும் இயக்கலாம். இதன் மூலம் மின்சார கட்டணம் மிச்சமாகும். எரிபொருள் செலவு குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது.
மோடியுடன் ஆலோசனை...
இது தொடர்பாக கடந்த வருடம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தேன். இந்த கண்டுபிடிப்பை அரசு துறையுடன் சேர்ந்து செய்ய விரும்பவில்லை. அங்கு திறமை மிகவும் குறைவு. இதற்கு அரசு துறை எனக்கு உதவுமா என முடிவெடுக்கவே ஆறு மாதம் ஆகும்.
உத்தர்கண்ட்...
முதலில் உத்தர்கண்ட் மாநிலத்தில் விற்பனை துவங்கி பின்னர் மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும். உத்தர்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டாலும், வீடுகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்வதில் பற்றாக்குறை உள்ளது. இந்த சைக்கிள் இந்த பற்றாக்குறையை குறைக்கும். இந்த சைக்கிள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உற்பத்தி செய்யப்படும்.
உடற்பயிற்சி...
மேலும் இந்த சக்கிளை பயன்படுத்துவதன் மூலம் உடலில் எரிக்கப்படும் சக்தியின் அளவு கணக்கிட முடியும் இந்த சைக்கிளால் உலகம் முழுவதும் 1.3 பில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.