பீகாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யானை சுட்டுக்கொலை!
பீகாரில் 15 பேரை மிதித்துக் கொன்ற யானை சுட்டுக்கொல்லப்பட்டது.
பாட்னா: பீகாரில் 15 பேரை மிதித்துக் கொன்ற யானை வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது.
பீகார் வனப்பகுதியில் இருந்த 25 வயது காட்டு யானை ஒன்று அதன் பெற்றோரை பிரிந்தது. இதனால் அந்த யானைக்கு மதம் பிடித்தது.
இதைத்தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை வனப்பகுதி ஓட்டிய கிராமங்களை சூறையாடத் தொடங்கியது. மேலும் அந்தப்பகுதியில் வசித்து வந்த 4 பேரை மிதித்து கொன்றது.
தாக்கி கொன்ற யானை
பின்னர், அருகில் உள்ள ஜாகர்கண்ட் மாநிலத்தில் புகுந்த அந்த யானை அங்கேயும் அட்டகாசம் செய்து வந்தது. ஜார்கண்ட் வனத்தில் வசித்து வந்த 11 பேரை யானை தாக்கி கொன்றது.
தீவிரமாக முயற்சி செய்த வனத்துறை
இவர்களில் 2 பேர் சில தினங்களுக்கு யானை மிதித்து உயிரிழந்தனர். 15 பேரை கொன்றுவிட்டு வனத்தில் திரிந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தனர்.
சுட்டுக்கொல்ல உத்தரவு
யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது. இதையடுத்து யானையை சுட்டுக்கொல்ல பீகார் அரசு உத்தரவிட்டது.
சுட்டுக்கொல்லப்பட்ட யானை
மேலும், யானையை சுட்டு கொல்வதற்காக திறமையான வேட்டைக்காரர் ஒருவரையும் நியமித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மதம்பிடித்த அந்த யானை சுட்டுக்கொல்லப்பட்டது.
சர்வதேச யானைகள் தினம்
சர்வதேச யானைகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் மதம்பிடித்த யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இருப்பினும் மக்கள் நலனுக்காக அரசு எடுத்துள்ள இந்த முயற்சியை ஏற்றாக வேண்டும் என்ற கருத்தும் எழுந்து வருகின்றனர்.