50 வருட அடிமைத் தளையை விடுவித்தபோது கண்ணீர் விட்ட யானை- நெஞ்சை நெகிழ்த்தும் சம்பவம்
மதுரா: ஐம்பது ஆண்டுகளாக சங்கிலியால் கட்டப்பட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்ட யானை பாகனிடமிருந்து விலங்குகள் அறக்கட்டளை ஊழியர்களால் மீட்கப்பட்டது. இதை தனது அறிவால் உணர்ந்த அந்த யானை கண்ணீர் வடித்து தனது நன்றியை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச தெருக்களில் பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட யானைகள் பலவும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அதுபோன்ற ஒரு ஆண் யானைதான் 50 வயதான ராஜு. வெயில், மழை என்று பார்க்காமல் அந்த யானை யாசகம் கேட்க பயன்படுத்தப்பட்டது. அதன் கால்களில் இரும்பு சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது,
கோர்ட்டில் வழக்கு
இதுகுறித்து அறிந்த லண்டனை தலைமையிடமாக கொண்ட பால்மர் கிரீன் என்ற விலங்குகள் அறக்கட்டளை அமைப்பினர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த யானையை மீட்க கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ராஜுவை மீட்க விலங்கு நல அமைப்பினர் போலீஸ் துணையுடன் சென்றுள்ளனர்.
பாகனை சம்மதிக்க வைக்க முயற்சி
இந்த அனுபவத்தை விலங்கு நல ஆர்வலர் குழுவை சேர்ந்த பூஜா பினேபால் கூறுகையில் "நாங்கள் யானை பாகனை எப்படியாவது சம்மதிக்க வைத்து அவரிடமிருந்து யானையை பெற முயற்சி செய்தோம்.
யானை தாக்குமோ என அச்சம்
ஆனால் எங்களை பார்த்த யானை பாகன் கோபத்துடன் கத்தி சண்டை போட்டார். இதை பார்த்ததும் யானை எங்கள் மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்று அஞ்சினோம். ஆனால் நல்ல வேளையாக மீட்பு குழுவுக்கு யானை ஒத்துழைப்பு தந்தது.
கண்களில் தண்ணீர்
யானையின் கால் சங்கிலிகளை அவிழ்த்துவிட்டபோது, அதன் கண்களில் இருந்து தண்ணீர் வழிந்தது. அதுவலியால் வந்த கண்ணீர் என்பதைவிட தன்னை காப்பாற்றியவர்கள் மீதான நன்றி பெருக்குடன் வந்த கண்ணீர் என்றுதான் நாங்கள் நஇநைக்கிறோம்.
குட்டியை பிரித்தனர்
ராஜு குட்டியாக இருந்தபோதே அதன் தாயிமிருந்து பிரித்து வளர்க்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் 50 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர் சொல்வதை கேட்பதற்காக யானையை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அரிவாளால் வெட்டியுள்ளனர்.
20க்கும் மேற்பட்ட உரிமையாளர்களுக்கு அன்த யானை கைமாற்றப்பட்டுள்ளது. கடும் வெயிலிலும் தார் ரோடுகளில் நடக்க வைத்ததால் கால்கள் கொப்புளங்களாக காணப்படுகின்றன" என்றார்.