டிக்டாக் விபரீதம்.. கொரோனா வராமல் இருக்க ஊமத்தங்காயை அரைத்து குடித்த 11 பேர் கவலைக்கிடம்
சித்தூர்: ஆந்திராவில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க ஊமத்தங்காயை அரைத்து குடித்த குழந்தைகள் உட்பட 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டிக்டாக்கில் வந்த வீடியோவை பார்த்து இப்படி ஒரு விபரீதத்தை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திராவின், சித்தூர் மாவட்டம் ஆரம்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் பாபு மற்றும் சுதாகர். ஆகியோர் நேற்று காலை செல்போனில் டிக்டாக் வீடியோக்களை பார்த்துள்ளார்கள். அப்போது அதில் ஊமத்தங்காய் விதையைத் தின்றால் கொரோனா வைரஸ் வராது என்று ஒரு வீடியோ வந்திருக்கிறது.
அதை உண்மை என்று நம்பிய அவர்கள் இருவரும், தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து வனப்பகுதிக்கு சென்று . ஊமத்தங்காய் விதைகளை சேகரித்து வந்தனர்.
பின்னர் அதை டிக்டாக் வீடியோவில் சொன்னபடி அரைந்து கலந்து குடித்தனர். இதில் சிறிது நேரத்தில் மகேஷ் பாபு, சுதாகர், சினேகா, வீனம்மா, வெங்கடம்மா உள்ளிட்ட 11 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் பைரெட்டிபல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 11 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளத்தில் வரும் வதந்திகளை அப்படியே நம்ப வேண்டாம் என்று எவ்வளவு எச்சரித்தாலும் மக்கள் அதில் வரும் தகவல்களை உண்மை என்று நம்பி விபரீதங்களில் சிக்கிவிடுகிறார்கள். இதனால் சமூக வலைதளங்கள் அண்மைக்காலமாக உயிரை பறிக்கும் தளங்களாக மாறி வருகிறது. டிக்டாக், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் சிலர் பொழுது போக்க செய்யும் சேட்டைகள் பலருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே மக்களே சமூக வலைதளத்தில் வரும் தகவல்களை எப்போதுமே உடனே நம்ப வேண்டாம். அதுவே நல்லது.