மோடி அரசின் கனவு திட்டம் 'ஸ்வச் பாரத்'.. தற்போதைய நிலை என்ன?
டெல்லி: பிரதமர் மோடி தனது முதலாவது சுதந்திர தின உரையில், குறிப்பிட்ட முக்கிய திட்டம் 'தூய்மை இந்தியா'. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து அனைவருக்கும் கழிவறைகள் அமைத்துக் கொடுப்பது என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
2019ம் ஆண்டு காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் இந்தியாவை தூய்மை செய்யவேண்டும் என்பதே இலக்கு.
2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி ஸ்வச் பாரத் என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, நாட்டில் 10ல் 4 வீடுகளில்தான் கழிவறை இருந்தது. எனவே அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 10 கோடி கழிவறைகளை கட்டிக் கொடுக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இருந்தது.
நோய்கள் பரவும்
திறந்த வெளியில் மலம் கழிப்பது மானத்தோடு தொடர்புடையது மட்டுமின்றி, பெருவாரியான நோய்களின் ஊற்றுக்கண். டையரியா போன்ற தொற்று நோய்கள் இதனால்தான் பரவுகின்றன. கழிவறை வசதி இல்லை என்பது பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். பொது வெளியில் மலம் கழிக்க செல்லும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதும், கேலிக்கு உள்ளாவதும் அதிகம் நடைபெறுகின்றன.
நல்ல முன்னேற்றம்
இரண்டரை வருட இந்த காலகட்டத்தில், பத்துக்கு ஆறு வீடுகளில் கழிவறை அமைத்துக் கொடுப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 20 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிதி உதவியோடு கட்டப்படும் கழிவறைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதற்கு காரணம்.
வளர்ச்சி நிலை
2014 அக்டோபர் முதல் நாட்டில் இதுவரை, 4 கோடி கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் குறைவான கழிவறைகள் கட்டப்பட்டு வந்தன. மோடி அரசு ஸ்வச் பாரத் கோஷத்தை முன்னெடுத்த பிறகு, 2016-17 நிலவரப்படி, ஆண்டுக்கு, 2 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
பஞ்சாயத்துகளுக்கு இலக்கு
தனி வீடுகளை குறி வைத்து இந்த கோஷத்தை முன்நகர்த்தியதோடு, பஞ்சாயத்து அடிப்படையிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது மமத்திய அரசு. நாட்டில் 1,93,374 கிராம பஞ்சாயத்துகள், தங்களது கிராமத்தில் கழிவறை இல்லாத வீடே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அதேநேரம், இந்த கழிவறைகள் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
வெற்றி
இந்த திட்டம் என்பது மோடி அரசு மேற்கொண்ட பெரும் முயற்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதோடு, மக்களின் மனநிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
(பிரணவ் குப்தா ஒரு ஆராய்ச்சியாளர். நிதின் மேஹ்தா ரன்னிதி கன்சல்டிங் மற்றும் ரிசர்ச் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் ஆவார்.)