இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூர் விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு
பெங்களூர்: பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப் பட்டுள்ளது.
பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளதாகவும், அந்த மின்னஞ்சலை அனுப்பியவரின் பெயர் விவரம் எதுவும் இல்லை எனவும் மிரட்டல் குறித்து விமான நிலைய அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குடியரசு தினமான கடந்த 26-ந்தேதி போடப்பட்டு இருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த உஷார் நிலை உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு தலைமையகத்தின் உத்தரவுப்படி தொடர்ந்து வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கும். என்றாலும், விமான போக்குவரத்து வழக்கம் போல் நடந்து வருகிறது என கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.