"மேற்குவங்கத்தில் அவசர நிலை பிரகடனம் போன்ற சூழல் நிலவுகிறது!"... பாஜக தலைவர் குற்றச்சாட்டு!
ஹவுரா: "பாஜகவை சேர்ந்த இளம் பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம், மேற்குவங்கத்தில், அவசர கால நிலையை நினைவூட்டுகிறது" என்று பாஜக தலைவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
மேற்குவங்கத்தில் லோக்சபா தேர்தல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான ஆடை மற்றும் ஒப்பனையுடன் வந்த நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி படத்தை கேலிக்குரியதாக போட்டு பாஜக வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹவுரா மாவட்ட பாஜக இளையோர் அணி நிர்வாகியாக செயல்படும் பிரியங்கா சர்மா என்பவர் மார்ஃபிங் செய்யப்பட்ட மம்தாவின் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விபாஸ் ஹஸ்ரா என்பவர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரியங்கா சர்மாவை அதிரடியாக கைது சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக தலைவரும், அசாம் மாநில அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கைது செய்யப்பட்ட பிரியங்கா சர்மாவை சிறையில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மேற்குவங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் அவசர கால நிலையை நினைவூட்டுவதாக உள்ளது.
பிரதமர் மோடியை பற்றி சமூக ஊடகங்களில் பல மோசமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு முதல்வரின் படத்தை பகிர்ந்ததற்காக இளம் பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் படத்தை பகிர்வது குற்றமா? இது போன்ற சம்பவங்கள் நடந்தால், மேற்குவங்கத்தில் அவசர நிலை உள்ளதாக மக்கள் கருதலாம்.
நெருக்கடி நிலை இருந்தபோது, தனக்கு எதிராக எழுதியவர்களை இந்திரா காந்தி கூட ஜெயிலில் போட்டிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். நீதிமன்றம் நிச்சயம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று கருதுகிறேன். இதுதொடர்ந்தால் பேச்சுரிமை என்பதே இருக்காது," என்று கூறி இருக்கிறார்.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் பிரியங்கா சர்மா கைது நடவடிக்கை குறித்து மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரம் மேற்குவங்க அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
அண்மையில் மம்தாவின் பிரச்சார வாகனம் சென்றபோது 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்ட பாஜக தொண்டர்கள் மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது முதல்வர் மம்தாவின் கேலிக்குரிய படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பாஜகவின் இளம் பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.