பெங்களூருவையும், ஐடி துறையையும் தீவைத்து கொளுத்த வேண்டும்: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்
பெங்களூரு: தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களையும் (ஐடி), பெங்களூருவையும் தீ வைத்து கொளுத்த வேண்டும் என்று பாரத ரத்னா விருது பெற்றவரும், பிரதமருக்கான விஞ்ஞானிகள் ஆலோசனை குழு தலைவருமான சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு நகரின் அடிப்படை மதிப்புகளை ஐடி துறை கபளீகரம் செய்து விட்டதாக கூறி தனது ஆத்திரத்தை ராவ் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஐடி தலைநகர், இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றெல்லாம் பெங்களூரு புகழப்பட காரணம், இங்கு குவிந்துள்ள பிரபல மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள்தான்.
பெங்களூருவின் லைப் ஸ்டைல், பல மாநில மக்களும் ஓரிடத்தில் குவிந்து பரவியுள்ள கலாச்சார ஊடுருவல் போன்றவற்றை அனுபவிக்க பெங்களூரை தேடி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால் விஞ்ஞானி ராவ் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆங்கில இதழ் ஒன்றுக்கு ராவ் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: பெங்களூரு முன்பெல்லாம் அறிவாளிகளின் நகரமாக மதிக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்டது.
ஆனால், ஐடி துறை திடீரென பெற்ற வளர்ச்சிக்கு பிறகு இதன் பழம் பெரும் கலாச்சாரம் தகர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மிகப்பெரும் மாற்றம் வந்துள்ளது. தூய்மையாக இருந்த பெங்களூருவில் தற்போது, எங்கு பார்த்தாலும் குப்பை. எலக்ட்ரானிக் குப்பையும் பெருகிவிட்டது.
நான் ஒரு பெருமைமிகு பெங்களூருவாசி. எனவே எனக்கு இந்த மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன. வேலை வாய்ப்புக்காக பெங்களூருவுக்கு வரும் மக்களால் நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவுசார் நகரம் என்ற பெருமையை பெங்களூரு இழந்து வருகிறது.
ஐடி துறை நிறுவனங்களை பெங்களூரை விட்டு சற்று தூரத்தில் அமைத்திருக்க வேண்டும். அப்போது நகருக்குள் நெருக்கடி குறைந்திருக்கும்.
"ஐடி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறீர்களே, அப்படியானால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 பேர் மட்டுமே பிஹெச்டி படிப்பை முடிக்கிறார்களே ஏன்?" என்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் என்னிடம் கேட்டார். அந்த கேள்வியில் உண்மையுள்ளது. அறிவை வளர்த்துக்கொள்ளாமல் வருமானத்தை பெருக்கும் வழியை மட்டுமே பெங்களூரு தற்போது கற்றுக்கொடுத்து வருகிறது.
இந்த நகரத்தின் அடிப்படை மதிப்புகளை ஐடி துறை திருடுமானால், அப்போது பெங்களூருவை மட்டுமல்ல, ஐடி துறையையும் தீயிட்டு கொளுத்த வேண்டும். இவ்வாறு விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார்.