உணர்ச்சி பொங்க நிதி அமைச்சகத்திற்கு குட்பை சொன்ன ப. சிதம்பரம்
டெல்லி: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதி அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து இன்று பிரியாவிடை பெற்றார்.
3 முறை மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதுவரை மொத்தம் 9 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். ஆனால் மொராஜி தேசாய் தான் இருப்பதிலேயே அதிகபட்சமாக 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் சிதம்பரம் நிதி அமைச்சக அதிகாரிகளிடம் இருந்து இன்று பிரியாவிடை பெற்றார். அவர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் மத்தியில் கடைசியாக பேசியபோது நாட்டின் பொருளாதாரம் சந்திக்கும் சவால்களை பட்டியலிட்டார்.
அதிகாரிகள் மத்தியில் சிதம்பரம் பேசுகையில், 1966ம் ஆண்டு முதல் நான் தினமும் 16 மணிநேரம் வேலை பார்க்கிறேன். இனியும் அவ்வாறே பார்ப்பேன். இதுவரை பார்த்ததைவிட இனி என்னை பொது வாழ்வில் அதிகம் பார்ப்பீர்கள் என்றார்.
இது குறித்து சிதம்பரத்துடன் பல ஆண்டுகளாக பணியாற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சிதம்பரம் அவரால் முடிந்த அளவுக்கு இன்று உணர்ச்சிவசப்பட்டார். அவர் அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார் என்றார்.
இன்று காலை 8.15 மணிக்கு தனது அலுவலகத்திற்கு சென்ற சிதம்பரம் நிலுவையில் இருந்த கோப்புகளில் கையெழுத்திட்டார், கடைசி நாளான இன்று மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்.