பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி
புவனேஸ்வர்: பெண்களை பலப்படுத்துவதுதான், தேசத்தின் பலம், என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் 24வது துவக்க நாள் விழாவின்போது கட்சியினரிடையே, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
எனது நிர்வாகத்தில் பெண்களின் முன்னேற்றம் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். வீடோ, சமுதாயமாக இருந்தாலும், மாநிலம் அல்லது நாடு எதுவாக இருந்தாலும் அங்கு பெண்கள் வலுவாக இருந்தால்தான் அந்த அமைப்புகளும் வலுப்பெறும்.
தங்கள் வீடுகளை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்கிறார்களோ, அந்த தாய்மாரும், அந்த சகோதரிகளும் கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்துகளை அதே திறமையுடன் நிர்வாகம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
சமூகத்தின் சக்கர அச்சாணி தாய்மார்கள்தான். அவர்களின் வளர்ச்சி இல்லாமல் இந்த ரதம் முன்னோக்கி பயணிக்க முடியாது. பஞ்சாயத்து ராஜ், நகர உள்ளாட்சி அமைப்புகள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது எங்கள் அரசு.
மறைந்த முதல்வர் பிஜு பட்நாயக் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராடி வரும் கட்சி பிஜூ ஜனதா தளம்.
"எனக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்குறீங்களே.. புதுச்சேரியில் என்ன பண்ணுறீங்க.". மோடி நேரடி 'அட்டாக்'
வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாது செயலிலும் அது இருக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் கொள்கை. ஆகவே, 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது 33% பெண் வேட்பாளர்களை நிறுத்தியது பிஜு ஜனதா தளம் மட்டும்தான்.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேசிய கட்சிகள் பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசுகின்றன. தேர்தலுக்குப் பிறகு தங்கள் வாக்குறுதிகளை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நமது மக்கள் தொகையில் பாதி அளவுக்கு இருக்கக்கூடிய பெண்களை இப்படி நாம் கையாளக் கூடாது.
நமது அரசியலில் அவர்களுக்கு உரிய பங்களிப்பு இருக்க வேண்டும். பிஜு ஜனதா தளம் ஒரு மாநில கட்சியாக இருந்த போதிலும் கூட சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் 33 சதவீதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரும் கட்சியாக இருக்கிறது. தேசிய கட்சிகள் மறந்து விட்ட இந்த வாக்குறுதியை பிஜு ஜனதா தளம் தொடங்கி நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.