காஷ்மீரில் ராணுவம்-லஷ்கர் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி
காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே நடத்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே நடத்த கடும் மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட தேடுதலில் பந்திபோராவின் முக்கிய பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதல்கள் காரணமாக பொது மக்களும் பாதிக்கப்படுவதாக அடிக்கடி கூறப்பட்டது.
இதையடுத்து இதுபோன்ற திடீர் தாக்குதல்களில் பொதுமக்களை பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு பந்திபோரா பகுதியை ராணுவம் 'என்கவுண்டர் சோன்' என பெயரிட்டது. மேலும் இது போன்ற என்கவுண்டர் பகுதிகளில் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியது.
இதையடுத்து இன்று காலை அந்த பந்திபோரா பகுதியில் திடீரென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் முதலில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பந்திபோராவின் 'ஹசன்' என்ற பகுதியில் தீவிரவாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் தீவிரவாதி அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ராணுவத்தின் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர் குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.