பட்டமளிப்பு விழாவில் கவுன் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி தேவை: நிதிஷ்குமார் வேண்டுகோள்
நேற்று நடைபெற்ற பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா ஐ.ஐ.டி.யின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அம்மாநில கவர்னர் டி.ஒய். பாட்டீல் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பட்டமளிப்பு விழா மரபுகளின் படி கவுன் (அங்கி) மற்றும் தொப்பிகள் அணிந்து வந்திருந்தனர்.
அப்போது விழா மேடையில் பேசிய மந்திரி நிதிஷ் குமார், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நோக்கி வேடிக்கையாக ‘பட்டமளிப்பு விழாக்களில் இந்த கவுன் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்' என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அவர் பேசியதாவது, ‘இந்தியாவின் ஜனாதிபதியாக நீங்கள் பொறுப்பேற்ற பிறகு தேவையற்ற பல சம்பிரதாய செயல்களுக்கு முடிவு கட்டியுள்ளீர்கள்.
இதைப் போன்ற பட்டமளிப்பு விழாக்களில் கவுன்களை மாட்டிக் கொண்டு பட்டம் வழங்குவதும் பட்டம் பெறுவதுமான இந்த மரபுகளுக்கும் நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கவுனுக்கு பதிலாக வெறும் தொப்பியை மட்டுமே அணிந்து வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினால் அவர்களுக்கும் வானத்தில் பறப்பதை போன்றதொரு உணர்வு தோன்றும்' என்றார்.
நிதிஷ்குமாரின் பேச்சை சிகப்பு நிற அங்கி அணிந்து மேடையில் அமர்ந்திருந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ரசித்துக் கேட்டு சிரித்தார்.