மின்சாரத்தை மிச்சப்படுத்தினால் வெப்பமயமாதல் பிரச்சினையை குறைக்கலாம்: மோடி வேண்டுகோள்
டெல்லி: மின்சாரத்தை சேமிப்பதுதான், உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் முதல் வழியாகும். மின்சாரத்தை சேமிக்க பல திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அதில் எல்இடி பல்புகளை பயன்படுத்துவதும் ஒன்றாகும் என்று பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது, ஆல் இந்தியா ரேடியோ மற்றும், தூர்தர்ஷன் மூலம், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம், மக்களிடம் உரையாடிவருகிறார்.
இதன் 14வது நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மோடி பேசியதாவது: இப்போதெல்லாம், உலக வெப்பமயமாதல் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. டிசம்பர் 14ம் தேதி, தேசிய மின்சார சேமிப்பு தினமாகும். மின்சாரத்தை சேமிப்பதுதான், உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் முதல் வழியாகும். மின்சாரத்தை சேமிக்க பல திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அதில் எல்இடி பல்புகளை பயன்படுத்துவதும் ஒன்றாகும்.
மாற்றுத்திறனாளிகள் பலரும், சமூகத்திற்கு சேவையாற்றி வருவதை பார்க்க முடிகிறது. நாம் அவர்களை பார்க்கும் தோரணையை மாற்றிக்கொண்டால், மாற்றுத்திறனாளிகள் நமது நாட்டின் பெரிய சொத்து என்பதை மறுக்க முடியாது.
MyGov இணையதளத்தில், ஸ்வச் பாரத், சன்சாத் ஆதர்ஷ் கிராம், மற்றும் சுகாதார துறை தொடர்பான 3 இ-புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவற்றை அனைவரும் வாசிக்க வேண்டும். ஒரே பாரதம், வலிமையான பாரதம் என்பதற்கு உறுதியேற்போம். குளிர்காலம் வந்துவிட்டது. தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு மோடி தெரிவித்தார்.