கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கிய அமலாக்கத்துறை!
மும்பை: கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதற்காக, கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் ரெய்டுகளை நடத்தியுள்ளது சிபிஐ. மேலும் அவர் வெளிநாடு செல்ல முடியாதபடி லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் லுக்அவுட் நோட்டீசை அக்டோபர் 4ம் தேதிவரை நீடித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ரூ.90 லட்சம் முடக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தி சேனல் ஒன்று ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.