370வது பிரிவுக்கு போராட்டம் அறிவித்த ஈரம் காயலை... பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம்தான் பரூக் அப்துல்லா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் தீவிர அரசியல் களத்தில் இறங்காமல் அமைதி காத்து வந்தார் பரூக் அப்துல்லா.
அரசியல் நடவடிக்கைகள்
அண்மையில் மற்றொரு முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி சிறையில் இருந்து விடுதலையானார். மெகபூபா விடுதலைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின. நீக்கப்பட்ட 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்தும் வரை போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய கூட்டணி
இதற்கான குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
சர்ச்சை பேச்சு
ஏற்கனவே சீனாவின் உதவியுடன் 370வது பிரிவை அமல்படுத்துவோம் என பரூக் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையாவும் வெடித்திருந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருக்கிறது. சீனாவுக்கு ஆதரவாக பரூக் அப்துல்லா பேசுவது கடும் எதிர்ப்புக்குள்ளாகியும் இருக்கிறது.
|
பரூக் அப்துல்லாவிடம் விசாரணை
இந்த நிலையில் இன்று திடீரென ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஶ்ரீநகரில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் பரூக் அப்துல்லாவிடம் விசாரணை நடைபெற்றது.
|
உமர் அப்துல்லா எதிர்ப்பு
இதனிடையே பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதற்கு உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் அவர் கூறியுள்ளார். அமலாக்கப்பிரிவின் கேள்விகளுக்கு தேசிய மாநாட்டு கட்சி உரிய பதில் தரும் எனவும் உமர் அப்துல்லா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.