எய்ட்ஸ் பாதிப்பு... மனைவி, மகள்களை காரோடு எரித்துக் கொன்ற ம.பி. பொறியாளர் கைது
போபால்: எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மனைவி மற்றும் இரண்டு மகள்களை காரோடு எரித்துக் கொன்ற பொறியாளரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்த போது, இவருக்கும் இவரது மனைவிக்கும் ஹெச்.ஐ.வி. பாசிடிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த தம்பதி தங்களது ஒன்பது மற்றும் இரண்டு வயதுள்ள மகள்கள் இருவருக்கும் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், அவர்களுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக ரமேஷும், அவரது மனைவியும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த மாதம் மகாராஷ்டிராவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்தோடு காரில் புறப்பட்டனர். பின்னர் மார்ச் 3ம் தேதி திரும்பவும் மத்திய பிரதேசம் திரும்பும் வழியில் சாலையிலேயே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
கார் போபால் அருகே வந்த போது பின் இருக்கையில் குழந்தைகள் இருவரும் உறங்கிக் கொண்டிருக்க, காருக்குத் தீ வைத்துள்ளார் ரமேஷ். ஆனால், திடீரென மனைவிக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை மட்டுமாவது காப்பாற்றி விடும்படி கணவரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனால், காரை விட்டு வெளியேறி குழந்தைகளை காப்பாற்ற ரமேஷ் முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி விட, காருக்குள் இருந்த மனைவி மற்றும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சில தினங்கள் தனியே சுற்றித் திரிந்த ரமேஷ், பின்னர் போலீசில் சரணடைந்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் முயற்சி பலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரமேஷைக் கைது செய்த போலீசார், அவர் கூறுவது உண்மை தானா என விசாரித்து வருகின்றனர். விரைவில் மீண்டும் அவருக்கு ஹெச்.ஐ.வி. சோதனை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
இதற்கிடையே ரமேஷ் நாடகமாடுவதாகவும், எனவே இந்த விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டும் என அவரது மைத்துனர் போலீசில் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ உலகில் எவ்வளவோ வளர்ச்சிகள் வந்து விட்ட நிலையில், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டதால் மனைவி மற்றும் மகள்களைக் கணவரே காரோடு எரித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
An engineer working with a public sector undertaking in Madhya Pradesh has made the chilling revelation that he burnt to death his wife and two daughters, aged nine and two, in his car as part of an alleged suicide pact after finding out that he and his family were HIV-positive.