இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
மும்பை: டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள இயலாத கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மும்பை, வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாத பொறியியல் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சோக சம்பவம் குவாலியரில் நடந்துள்ளது. பி.டெக் மாணவியான அவர், இந்திய அணியின் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் இந்த துயர முடிவை எடுப்பதாக தனது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியும் இந்தப் போட்டியில் இந்தியா வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தாராம் அம்மாணவி. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தியா தோல்வி அடைந்து விட்டதால், ஏமாற்றத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் தந்தை கலால் துறையிலும், தாயார் ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர்.