ஸ்டண்ட் செய்யப் போய்.. ஹாஸ்டலின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினியரிங் மாணவர் பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஸ்டண்ட் செய்யும் ஆசையில் கல்லூரி ஹாஸ்டலின் ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு தாவிக் குதிக்க முயன்ற 19 வயது என்ஜினியரிங் மாணவர், கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்பசீராபாத்தில் உள்ள நரசிம்மா ரெட்டி என்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் சாய் கிருஷ்ணா (19). கம்மம் பகுதியைச் சேர்ந்த இம்மாணவர் கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சாய் தனது நண்பர்களுடன் சேர்ந்து 3வது மாடியில் இருந்து அருகில் இருந்த மற்றொரு மாடிக்கு தாவிச் செல்ல முற்பட்டுள்ளார். சாயின் நண்பர்கள் சரியாக தாவிச் சென்று விட, எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார் சாய்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை, உடனடியாக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மாணவர்கள் குறும்பாக ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு தாவி ஸ்டண்ட் செய்ய முற்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.