திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கலாம்!
சித்தூர்: திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு ஆந்திரமாநில சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்கள் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், சந்திரகிரியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கோட்டை ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 16ம்தேதி தொடங்கி 24ம்தேதி வரை நடைபெறுகிறது.
அதேபோல், அக்டோபர் மாதம் 14ம் தேதியில் இருந்து 22ம்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் சுற்றுலா
பிரம்மோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்கள் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், சந்திரகிரியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கோட்டை ஆகியவற்றை சுற்றிப் பார்ப்பதற்காகவும், மேற்கண்ட கோவில்களை தரிசிப்பதற்காகவும் மத்திய அரசும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறையும் இணைந்து மாநிலத்திலேயே முதல் முறையாக 3 ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளன.
மூன்று ஹெலிகாப்டர்கள்
இந்த 3 ஹெலிகாப்டர்களும் அலிபிரியில் உள்ள மாநில சுற்றுலாத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. முதலில் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். கோவிலுக்கு அருகே உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதியம்மன்
சீனிவாசமங்காபுரத்தில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்குள்ள கோவிலுக்கு அருகே ஹெலிகாப்டர் தரையிறக்கப்படும். பின்னர் சந்திரகிரியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீகிருஷ்ணதேவராயர் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மீண்டும் திருப்பதி அலிபிரியில் உள்ள மாநில சுற்றுலாத்துறை அலுவலக வளாகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்.
கட்டணம் எவ்வளவு
ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட 3 இடங்களும் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளன. தலா ஒரு ஹெலிகாப்டரில் 12 நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம். தலா ஒரு நபருக்கு பயணக் கட்டணமாக ரூ.1,999 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிரம்மோற்சவ சுற்றுலா
ஹெலிகாப்டர் பயண ஆரம்ப நிகழ்ச்சி வருகிற 16ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறையும் இணைந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளதால் மக்களிடமும், பக்தர்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவராத்திரி பிரம்மோற்சவத்தில்
மக்களிடம் வரவேற்பு இருந்தால், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது ஹெலிகாப்டர்கள் இயக்க வாய்ப்பு உள்ளது என்று ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை சேர்ந்த சித்தூர் மாவட்ட அதிகாரி டி.வி.சந்திரமவுலி கூறியுள்ளார்.
திருமலை மீது தரிசனம்
இவை தவிர திருமலை மீது பாபவிநாசம், ஸ்ரீவாரி பாதம், ஆகாச கங்கா, ஜபாலி தீர்த்தம் ஆகிய இடங்களுக்கும் பேக்கேஜ் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது ஆந்திராமாநில சுற்றுலாத்துறை. இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு திருப்பதி வரும் பக்தர்கள் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கலாம் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது ஆந்திரமாநில சுற்றுலாத்துறை.