போதுமான பணம் இருக்கிறது.. மக்கள் கவலைப்பட வேண்டாம்... ரிசர்வ் வங்கி
போதுமான அளவிற்கு பணம் இருப்பில் இருப்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தப் பின்னர் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளுக்கு சென்று மாற்றி வருகின்றனர். பணம் தங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் போதிய அளவில் பணம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் காத்துக்கிடப்பதையடுத்து, ரிசர்வ் வங்கி இவ்வாறு அறிவித்துள்ளது. மேலும், பணத்தை சேகரித்துக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுத்து வைத்து கொள்ள வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போன்று ஏடிஎம் மையங்களுக்கு சென்று பணத்தை எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி இரவு திடீரென மத்திய அரசு அறிவித்தது. இதனால் கையில் இருந்த பணத்தைக் கூட செலவிட முடியாமல் மக்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள். இதனால், சிறு மற்றும் குறு வியாபாரிகள், சாதாரண ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் அளவில் அவதிக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதியில் இருந்து பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து மக்கள் வங்கிகள், அஞ்சலகங்களுக்கு படை எடுக்கத் தொடங்கினார்கள். இந்தியா முழுவதும் வங்கிகளில் கட்டுக்கடங்காத கூட்ட நெரில் ஏற்பட்டது. இதனால் வங்கிகளுக்கு வந்தவர்களுக்கு பணத்தை மாற்றி கொடுக்க முடியாத சூழல் உருவாகி திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனிடையே 11ம் தேதியில் இருந்து ஏடிஎம்கள் மூலம் பணத்தை எடுக்கலாம் மற்றும் மாற்றலாம் என்ற அறிவிப்பு வெளியானது. ஏடிஎம் மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், வங்கிகளில் கூட்டம் குறைந்துவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், ஏடிஎம்கள் மையங்கள் முழுமையாக செயல்பட முடியாமல் போய்விட்டன.
இதனால் வங்கிகளுக்கே மக்கள் மீண்டும் திரும்பத் தொடங்கினார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பையடுத்து இன்றும் வங்கிகளில் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது. இந்நிலையில்தான் மத்திய ரிசர்வ் வங்கி பணத்தை எடுத்து வீட்டில் சேமித்து வைக்க வேண்டாம் என்றும் போதிய அளவு பணம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.