டெல்லியில் ஜனவரி 22ம் தேதி “கார்கள் இல்லா தினம்” - கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: டெல்லியில் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதியை "கார்கள் இல்லா தினம்" என்று அனுசரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. எனவே அதை குறைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 22 ஆம் தேதியில் குறிப்பிட்ட பகுதிகளில் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
இதில் 2 ஆவது முறையாக நேற்று துவாரகா பகுதியில் குறிப்பிட்ட 2 இடங்களுக்கு இடையே கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் சைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், "டெல்லியில் மாசுக்களை குறைப்பதற்காக ஜனவரி 22 ஆம் தேதி கார் இல்லா தினமாக அனுசரிக்கப்படும். மேலும் அன்று நானும் சைக்கிளிலேயே அலுவலகம் செல்ல இருக்கிறேன்" என்று கூறினார்.
இந்த அறிவிப்பை 5 முதல் 10 சதவீத மக்கள் கடைப்பிடித்தாலே 10 சதவீத மாசுக்களை குறைக்க முடியும் என்று கூறிய அவர், இதுவே மிகப்பெரும் சாதனையாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் டெல்லி சாலையில் கார்களை குறைத்தால் தலைநகரில் மாசின் அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.