ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி எப்படி?... ஆராய துணைக்குழு அமைப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது எப்படி என்று ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தூத்துக்குடியில் சுமார் 600 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது குறித்து ஆய்வு செய்ய துணைக்குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் தாமிர ஆலையை மேலும் 640 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் குமரெட்டியபுரம் பகுதி பொதுமக்கள் ஏற்கெனவே இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
தங்களது பகுதியில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இன்னும் கொடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில், வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் மக்கள் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாகியுள்ளது.
22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்து வருவதற்கு எதிராக கைக்குழந்தைகளுடன் அலை அலையாய் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கியது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2009ல் சுற்றுச்சூழல் துறை ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கியது குறித்து ஆய்வு செய்ய துணைக்குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.