பிரபல சுற்றுச்சூழல் இயக்கவாதி சுனிதா நாராயன் மீது கார் மோதல்- படுகாயம்: கொல்ல நடந்த முயற்சியா?
டெல்லி: பிரபல சுற்றுச்சூழலியல் இயக்கவாதி சுனிதா நாராயன் சாலை விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
டெல்லியில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது அவர் மீது பின்னால் வேகமாக வந்த ஒரு கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு இரு கைகளும் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சுனிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
52 வயதான சுனிதா நேற்று காலையில் தெற்கு டெல்லியில் உள்ள தனது வீடு இருக்கும் பகுதியான கிரீன் பார்க்கிலிருந்து லோதி கார்டனுக்கு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கார் படு வேகமாக அவருக்குப் பின்னால் வந்தது. வந்த வேகத்தில் சுனிதாவின் சைக்கிள் மீது அது மோதியது. இதில் சுனிதா தூக்கி வீசப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய கார் பின்னர் நிற்காமல் அங்கிருந்து படு வேகமாக போய் விட்டது.
இது விபத்தா அல்லது சுனிதாவைக் கொல்ல நடந்த முயற்சியா என்பது தெரியவில்லை.
2005ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வாங்கியவர் சுனிதா. மேலும், உலக தண்ணீர் பரிசையும் அவர் வென்றவர் ஆவார்.