பி.எப். மீதான வட்டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்.. நிதி அமைச்சகத்திற்கு மோடி உத்தரவு
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, மத்திய நிதி அமைச்சகத்திடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளதாகவும், எனவே வரி விதிப்பில் மாற்றம் செய்து இன்னும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) மீது வரி விதிக்கப்படுவதாக, 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
நாடு முழுவதிலுமுள்ள பெருவாரியான மக்களின் எதிர்ப்பை இந்த அறிப்பு சம்பாதித்தது. இதையடுத்து விளக்கம் கொடுத்தது நிதி அமைச்சகம். அதில், 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, பி.எப். கணக்கில் சேரும் தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாகவும், அசல் தொகைக்கு வரி கிடையாது என்றும் கூறியது.
இருப்பினும் மக்களிடம் குழப்பம் தீர்ந்தபாடில்லை. பெருவாரியான தொழிலாளர் பிரிவை கோபப்படுத்தியுள்ள வரி விதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டுள்ளாராம். நிதி அமைச்சகத்திடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்த அவர், பி.எப். மீதான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளாராம்.
எனவே, வரி விதிப்பு குறித்த திருத்தப்பட்ட அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.