எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. பி.எப் பணத்திற்கு வரி விதிக்கும் முடிவு வாபஸ்
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி விதிக்கும் முடிவை அரசு வாபஸ் பெறுவதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் இன்று அறிவித்தார். இதனால் நடுத்தர வர்க்கத்து தொழிலாளர் பிரிவு நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) மீது வரி விதிக்கப்படுவதாக, 2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
நாடு முழுவதிலுமுள்ள பெருவாரியான மக்களின் எதிர்ப்பை இந்த அறிப்பு சம்பாதித்தது. இதையடுத்து விளக்கம் கொடுத்தது நிதி அமைச்சகம். அதில், 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, பி.எப். கணக்கில் சேரும் தொகையை திருப்பி எடுக்கும்போது, 60 சதவீத தொகைக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாகவும், 40 சதவீத தொகை வரியற்றது என்றும் விளக்கம் கொடுத்தது.
இருப்பினும் மக்களிடம் கோபம் தீர்ந்தபாடில்லை. பெருவாரியான தொழிலாளர் பிரிவை கோபப்படுத்தியுள்ள வரி விதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டார். நிதி அமைச்சகத்திடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்த அவர், பி.எப். மீதான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தினார்.
இத்தகவல் இரு தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. எனவே, வரி விதிப்பு குறித்த திருத்தப்பட்ட அறிவிப்பு செவ்வாய்க்கிழமையான இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த தகவல்களை உறுதி செய்யும்விதமாக ஜெட்லி லோக்சபாவில் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வட்டி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு பதிலாக வேறு வழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஜெட்லி அறிவித்தார்.
ஜெட்லி அறிவிப்பு பல கோடி நடுத்தர வர்க்க தொழிலாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.