பிஎப் வட்டிக்கு வரி... நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினால் வாபஸ் ஆகிறது?
டெல்லி: வருங்கால வைப்பு நிதி திட்டத்திலிருந்த திரும்பப் பெறும் பணத்திற்கு வரி விதிக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. அந்த தொகைக்கு அளிக்கப்படும் வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எனினும் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தொழிலாளர் வைப்பு நிதி தொகைக்கு விதிக்கப்பட்ட வட்டி மீதான வரியை மத்திய அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமையன்று பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும்போது வருங்கால வைப்பு நிதி தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, கூறினார்.
பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர் ஒருவர் இந்த நிதியில் இருந்து பணத்தை எடுக்கும்போது 40 சதவீத தொகைக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும், மீதமுள்ள 60 சதவீத தொகைக்கு வரி விதிப்பு உண்டு, இது வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொழிலாளர்கள் இடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுசிறுக சேமிக்கும் பணத்துக்கு வரி விதிப்பதா? என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இதற்கு 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் கொந்தளித்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு எதிராக கையெழுத்திட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
|
மத்திய அரசு விளக்கம்
தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா இது பற்றி விளக்கம் அளிக்கும்போது, ''தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை (இ.பி.ஃஎப்.) ஓய்வுக்கு பின்பு திரும்பப்பெறும்போது முழுவதற்கும் வரி வசூலிக்கப்படமாட்டாது. இந்த வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் 60 சதவீத பங்களிப்புக்கான வட்டித்தொகை மீது மட்டுமே வரி விதிக்கப்படும். அதுவும் இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல்தான் நடைமுறைக்கு வரும்.
மோடிக்கு கடிதம்
இதற்கிடையே தொழிலாளர் பொது வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும்போது வட்டிக்கு வரிப் பிடித்தம் செய்வதற்கு 11 மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது குறித்து பாஜகவின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பிரிஜேஷ் உபாத்யாயா கூறும்போது, தொழிலாளர் பொது வைப்பு நிதியில் தொழிலாளர் பணம் செலுத்தும்போதே வரியையும் செலுத்தி விடுகிறார். மீண்டும் அந்த தொகைக்கு வரி விதிப்பது இரட்டை வரி விதிப்பு முறையாகும். இது குறித்து பரிசீலிக்க பிரதமர் மோடிக்கும், நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கும் கடிதம் எழுதுவோம் என்று கூறினார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா கூறும்போது, தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படுத்தும் இந்த பிரச்சினையை இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள் என்றார். மேலும், தொழிலாளர் பொது வைப்பு நிதிக்கு வரி பிடித்தம் செய்வதை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து வருகிற 10ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கின்றன.
திரும்ப பெற வாய்ப்பு
இந்நிலையில், அனைத்து தரப்பு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 60 சதவீத பணத்தை எடுக்கும்போது, அதன் மீதான வட்டிக்கு விதிக்கப்பட்ட வரியை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உறுதி அளித்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், இந்த வரிவிதிப்பு முறை விரைவில் வாபஸ் பெறப்படும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எனவே இந்த வரிவிதிப்பு முறை விரைவில் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.