பாஜகவின் தமிழகத்து தலையாட்டி பொம்மைகள் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு
பாஜக தமிழகத்தில் வைத்துள்ள இரு தலையாட்டி பொம்மைகள் தான் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என்று சி.ஆர்.சரஸ்வதி விமர்சித்து உள்ளார்.
பெங்களூரு : மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக செயல்படவே ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி உள்ளது என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசினார். சில கேள்விக்கு பதிலளித்தார் சிஆர் சரஸ்வதி.
டி.டி.வி தினகரனுக்கு தமிழகத்தில் அமோக ஆதரவு எழுந்து இருக்கிறது என்பதை அறிந்து சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் சிறையில் நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வைத்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் தான் பயந்து வருகிறார்கள்.
இது தோல்வியின் காரணமான பயமா அல்லது பாஜகவின் உத்தரவு வரவில்லையே என்பதற்கான காத்திருப்பா என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.
பாஜக தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரையும் தலையாட்டி பொம்மைகளாக்கி வைத்திருக்கிறது. ஆனால் பாஜக வெற்றி பெற அண்ணன் டி.டி.வி. தினகரன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கிய அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பிரதமர் மோடி படம் போட்டு காலண்டர் அச்சடிக்கும் அவலத்தை எங்கு போய் சொல்வது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தலின் தோல்வி பயம் காரணமாகவே அதில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.