பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் கொலை செய்தது என சந்தேகிக்கிறோம்: எரிக் சொல்ஹெய்ம்
பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் கொலை செய்தது என வலுவாக சந்தேகிக்கிறோம் என நார்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம்தான் கொலை செய்தது என வலுவாக சந்தேகிப்பதாக நார்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த பேட்டி:
பாலச்சந்திரன்
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மிக மோசமான செயல். பாலச்சந்திரனை இலங்கை ராணுவமே கொலை செய்தது என சந்தேகிக்கிறோம்.
புலிகள் சரண்
பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் ஏன் கொலை செய்தது? என தெரியவில்லை. வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் சரணடையும் தகவலை அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேவுக்கு தெரிவித்தோம்
ஏன் கொலை செய்தது?
இந்திய இடைத் தரகர்களும் கூட புலிகள் சரணடைவது தொடர்பாக இலங்கைக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் சரணடைந்தவர்களை ஏன் கொலை செய்தது இலங்கை ராணுவம் என தெரியவில்லை.
மொழி ஒரு தடை
பிரபாகரனுடன் உரையாடுவதில் எங்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்தது. அவருடனான சந்திப்பின் போது மொழிபெயர்ப்பாளர் இருக்க நேரிட்டது. பிரபாகரன் வெளிப்படையானவராக இல்லாமல் கடினமானவராகவே இருந்தார்.
இவ்வாறு எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.