வன்முறைக்குப் பயந்து தமிழ் வெட்டியான்கள் ஓட்டம்.. பிணங்களை அடக்கம் செய்ய முடியாமல் திணறிய பெங்களூர்!
பெங்களூரு: தமிழர்கள் இல்லாவிட்டால் பெங்களூரில் பிணங்களை அடக்கம் செய்வது கூட கடுமையாக பாதிக்கப்படும் என்பதையும் இந்த வன்முறைப் போராட்டத்தின் விளைவாக மக்கள் பார்க்க நேரிட்டது.
பெங்களூரில் தலைவிரித்தாடு தமிழர் எதிர்ப்பு போராட்டம் வன்முறை காரணமாக வெட்டியான் தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் அங்கருந்து சொந்த மாநிலத்திற்குப் போய் விட்டதால் பிணங்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குழி வெட்ட ஆள் கிடைக்கவில்லை என்பதால் பிணங்களை அடக்கம் செய்வதில் பெரும் சிரமும், குழப்பமும் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தும் கூட நிம்மதியில்லை
பெங்களூரின் ஒவ்வொரு அம்சத்திலும் தமிழர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பது வரலாறு. மரணத்தைத் தழுவினாலும் கூட தமிழர்களின் நிழல் படாமல் யாரும் இந்த உலகை விட்டு போக முடியாது என்பதும் நிதர்சனம். காரணம் இடு காடு, சுடுகாடு, கல்லறைத் தோட்டம் என் எல்லா இடத்திலும் தமிழர்களே அதிகம் உள்ளனர்.
கலவரத்தால் ஓடிய வெட்டியான்கள்
பெங்களூரில் காவிரிப் பிரச்சினையை வைத்து வன்முறையாளர்கள் நடத்திய மிகப் பெரிய வெறியாட்டம் தமிழர்களை பெரும் பீதிக்குள்ளாக்கி விட்டது. பரம்பரை பரம்பரையாக அங்கு வசித்து வரும் தமிழர்கள்தான் பெரும் மன உளைச்சலுக்குள்ளானார்கள். தமிழர்களை அனைத்து மட்டத்திலும் இந்தக் கலவரம் பாதித்து விட்டது. மயானங்களில் பிணங்களை எரிக்கும், அடக்கம் செய்ய குழி தோண்டும் வெட்டியான் தொழில் செய்வோரையும் கூட அது வெகுவாக பாதித்து விட்டது. பல மயானங்களில் தமிழ் வெட்டியான்கள் விட்டால் போதும் என்று ஓடி விட்டனர்.
குவிந்த பிணங்கள்
இதன் காரணமாக குழி வெட்ட முடியாமல், அடக்கம் செய்ய முடியாமல், எரிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 12 பிணங்கள் வரை அடக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சொல்கிறார் அனாதைப் பிணங்களை வாங்கி இலவசமாக அடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ள திரிவிக்ரம மகாதேவ். கண்மூடித்தனமான வன்முறையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
குழந்தைகளின் உடல்கள்
6 குழந்தைகளின் உடல்கள் உள்பட மொத்தம் 12 உடல்களை அடக்கம் செய்ய முடியவில்லை என்று கூறிய அவர் வெட்டியான் தொழிலில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அவர்கள் வன்முறைக்குப் பயந்து தமிழகத்திற்குப் போய் விட்டதால் அத்தனை அடக்க நிகழ்ச்சிகளும் பாதிக்கப்பட்டதாக வேதனையுடன் கூறினார். நேற்று அவர் தனது பெரிய சைஸ் ஆட்டோவில் 12 உடல்களையும் பத்திரமாக வைத்து அடக்கத்திற்காக விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
உடல்கள் நாற்றம்
உடல்களை நீண்ட நேரம் வெளியேயே வைத்திருந்ததால் அவற்றிலிருந்து துர் நாற்றம் வர ஆரம்பித்து விட்டதாகவும், இப்படியே போனால் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்றும் மகாதேவ் கவலை தெரிவித்தார். இப்படி ஒரு அவல நிலை ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மைசூரு ரோடு கல்லறைகளில் குழி வெட்டுவோர் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் யாரும் இப்போது இல்லை. எல்லோரும் சொந்த ஊருக்குப் போய் விட்டனர். நிலைமை சரியானால்தான் திரும்ப வருவார்கள். அதுவரை அடக்கப் பணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன என்றார் மகாதேவ்.
வன்முறைக் களமான மைசூரு சாலை
மைசூரு சாலையில்தான் மிகப் பெரிய அளவில் வன்முறைகள் அரங்கேறின என்பது நினைவிருக்கலாம். இதன் காரணாமாக இப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களுக்கு போய் விட்டனர். பலர் தமிழகத்திற்குப் போய் விட்டனர். இதனால் தமிழர்கள் ஈடுபட்டிருக்கும் பல்வேறு வகையான பணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனவாம்.
80,000 உடல்களை அடக்கம் செய்ய உதவியவர்
மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்தவரான மகாதேவ், கடந்த 40 வருடமாக இதுபோன்ற அனாதை உடல்களை வாங்கி அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 80,000 உடல்களை அவர் அடக்கம் செய்துள்ளாராம். இவரது தாத்தாவும் இதே சேவையில்தான் ஈடுபட்டிருந்தாராம்.