மகாத்மா காந்தி செய்ததைத் தான் நாங்களும் செய்கிறோம்: சுப்ரமணிய சுவாமி விளக்கம்
சமீபத்தில், நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் விதிக்கும் முறையை பா.ஜனதா நடைமுறைப்படுத்தியது. அது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் தலைவரான சுப்ரமணிய சுவாமி, அதனை காந்தீய வழி என நியாயப்படுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், அது குறித்து கூறுகையில், ‘இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,‘இந்த முடிவை நான் எடுக்க முடியாது. கட்சியின் மேலிடம் தான் இதனை தீர்மானிக்கும். மும்பை எனக்கு புகுந்த வீடு. ஏற்கனவே 2 முறை இங்கிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்'' என்றார்.
சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அத்வானி மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி வாழ்த்து தெரிவித்தது குறித்து அவர் கூறுகையில், ‘‘குடியரசு நாட்டில் மற்ற கட்சி தலைவர்களை நாம் விரும்பாதபோது கூட அவர்களை சந்தித்தால் நமக்கு தயக்கம் ஏற்படும். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்'' எனத் தெரிவித்தார்.