உ.பி. தேர்தல்: பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ராஜ்நாத்சிங்கைவிட வருண்காந்திக்கே அதிக ஆதரவு!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை விட வருண்காந்திக்கே அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் வருண்காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதில் பாஜக மேலிடம் தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சியை தக்க வைக்க மும்முரம் காட்டுகின்றன. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவும் எப்படியாவது சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் உ.பி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பதில் பாஜகவில் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் அல்லது ஸ்மிருதி இரானியை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த இருவரைத் தவிர வேறு ஒருவரை முன்னிறுத்தலாம் என விரும்புகிறது.
வருணுக்கு செம ஆதரவு
ஆனால் உ.பி. சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளோ வருண்காந்திக்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் ஈடிவி நடத்திய கருத்து கணிப்பில், பாஜக முதல்வர் வேட்பாளராக வருண் காந்திக்கு 51% ஆதரவு கிடைத்திருந்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு 28%; முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்குக்கு 10% பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக பேசிவரும் யோகி ஆதித்யநாத்துக்கு 8%; மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு 2%; ஸ்மிருதி இரானிக்கு 1% பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஸ்மிருதிக்கு ஆதரவு இல்லை
இந்தியா டுடே குழுமம் மே மாதம் நடத்திய கருத்து கணிப்பிலும் வருண் காந்தியே முதலிடம் பெற்றார். வருண் காந்திக்கு 45%' ராஜ்நாத்சிங்குக்கு 34% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். யோகி ஆதித்யநாத்-5%; கல்ராஜ் மிஸ்ரா-4%; ஸ்மிருதி இரானி-1% ஆதரவைத்தான் பெற்றிருந்தனர். இந்தி நாளேடான அமர் உஜலா வெளியிட்ட கருத்து கணிப்பிலும் வருண்காந்திக்கே முதலிடம் கிடைத்தது.
பாஜக மேலிடம் தயக்கம்
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படக் கூடுகிறது. இதனால் வருண் காந்தியை நிறுத்துவதே சரியான தேர்வாக இருக்கும் என்பது பாஜகவினரின் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வருண் காந்தியை முன்னிறுத்த விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
காரணம் இதுதான்...
நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதா? என்பதுதான் இவர்களது தயக்கத்துக்கு காரணமாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ள பாஜக விரைவில் இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.