எதிர்ப்பால் பல்டியடித்த சேவாக்.. ராணுவ வீரர் மகளுக்கு ஆதரவு கரம்!
டெல்லி: பல தரப்பு எதிர்ப்பால் மனம் மாறிய கிரிக்கெட் வீரர் சேவாக், ராணுவ வீரர் மகள் குர்மெகர் கவுருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் மகள் குர்மெகர் கவுர். இவர் டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
'பாகிஸ்தான் என் தந்தையை கொள்ளவில்லை, அங்கு நடைபெற்ற போரால் தான் எனது தந்தை உயிரிழந்தார். இந்த பிரச்சனையை பேசி தீர்த்திருந்தால் என்னை போன்ற பலர் தந்தையோடு இருந்திருப்பார்கள்' என உருக்கமாக அந்த பெண் அட்டையில் எழுதி அதை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்திருந்தார்.
மிரட்டல்கள்
இதனால் தேசியவாதிகள் என சொல்லிக்கொள்வோர் அந்த பெண்ணை கடுமையாக கண்டிக்க ஆரம்பித்தனர். பாஜக மாணவர் பிரிவான, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் குர்மெகர் கவுரை பலாத்காரம் செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
|
பேட்தான் ரன் அடித்ததாம்
இதனிடையே கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக், அந்த பெண்ணின் கருத்தை கேலி செய்யும்விதமாக, நான் இருமுறை முச்சதங்கள் விளாசவில்லை. எனது பேட்தான் அதை செய்தது என அட்டையை தூக்கி பிடித்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் உலவவிட்டிருந்தார்.
கண்டனங்கள்
இந்நிலையில், குர்மெகர் கவுரின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக சேவாக் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் குர்மெகருக்கு ஆதரவு கரம் நீட்டினர். இதையடுத்து 3 நாட்கள் கழித்து இன்று, இறங்கி வந்த சேவாக், கருத்து சுதந்திரம் பிறருக்கும் இருப்பதாக கருத்து கூறியுள்ளார்.
|
சுதந்திரம் உள்ளது
"தனது கருத்தை கூற அவருக்கு உரிமையுள்ளது. அவரை மிரட்டியவர்கள் வாழ்க்கையில் கடைத்தரமானவர்கள்.." என டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார் சேவாக்.
|
அனைவருக்கும் பொருந்தும்
"தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமையுள்ளது. குர்மெகர் கவுராக இருக்கட்டும் அல்லது போகாத் சிஸ்டர்களாக இருக்கட்டும்.. எல்லோருக்கும் இது பொருந்தும்" என்று மற்றொரு டிவிட்டில் சேவாக் கூறியுள்ளார்.