சிறப்பு பிரிவு நிதிமுறைகேடு! காஷ்மீர் அரசை கவிழ்க்க சதி! சிபியிடம் சிக்குகிறார் வி.கே.சிங்!
வி.கே.சிங் தமது பதவிக் காலத்தில் ரகசிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது குறித்து ராணுவத்தின் ரகசிய விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை முடிவடைந்து அதன் விவரங்களை உள்ளடக்கிய அறிக்கை தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்த போது 2010ஆம் ஆண்டு வி.கே.சிங் சிறப்பு உளவுப் பிரிவை ஒன்றை உருவாக்கினார். இந்த சிறப்பு உளவுப் பிரிவு ராணுவ ரகசிய நிதியில் இருந்து ரூ1.19 கோடியை ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவில் இருந்து பெற்றுள்ளது.
அந்த தொகையை ஜம்மு காஷ்மீர் வேளாண்துறை அமைச்சரான குலாம் ஹஸன் மிர்ரிடம் கொடுத்து அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவின் அரசை கவிழ்க்க லஞ்சமாக கொடுத்துள்ளது. மேலும் யெஸ் காஷ்மீர் என்ற அமைப்பின் ஹகிகத் சிங் என்பவருக்கு ரூ2.38 கோடி லஞ்சம் கொடுத்து தற்போதைய ராணுவ தளபதி பிக்ரம்சிங்குக்கு எதிராக போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடரவும் சிறப்பு உளவுப் பிரிவு ஏற்பாடு செய்தது என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வி.கே.சிங்கின் சிறப்பு உளவுப் பிரிவு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கூடும் என்று தெரிகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வி.கே.சிங் மறுத்துள்ளார். தாம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே தமக்கு எதிராக இத்தகைய புகார்கள் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான நரேந்திர மோடியுடன் ஹரியானா பிரசாரக் கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டதாலேயே வி.கே.சிங்கை பழிவாங்கப் பார்க்கிறது மத்திய அரசு என்று பாஜக கூறியுள்ளது.