கோமாவில் முன்னாள் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்!: மிகவும் கவலைக்கிடம்
டெல்லி: முன்னாள் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் டெல்லியில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் கோமாவில் உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்கப்படாததால் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்(76) பாஜகவில் இருந்து விலகினார். மேலும் பார்மர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு நெருக்கமானவர் ஜஸ்வந்த் சிங்.
டெல்லியில் வசித்து வரும் ஜஸ்வந்த் சிங் வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் கோமாவில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அத்வானி மருத்துவமனைக்கு சென்று ஜஸ்வந்த் சிங்கை பார்த்தார். மேலும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று ஜஸ்வந்தை பார்த்தனர்.
{ventuno}
தற்போது ஜஸ்வந்த் சிங்கிற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவரது குடும்பத்தாரிடம் போன் மூலம் பேசி அவரின் உடல் நிலை குறித்து தெரிந்து கொண்டார். மேலும் ஜஸ்வந்த் சிங் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்தார்.