ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங் பொறுப்பாளி: முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய் குற்றச்சாட்டு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) வினோத் ராய் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆ.ராசா தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
இதேபோல், பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் நிலக்கரி இலாகா பொறுப்பையும் கவனித்த போது, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த குழு தனது அறிக்கையில் கூறி இருந்தது. இந்த இரு ஊழல் வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சர்ச்சை புத்தகம்
இந்த ஊழல்களை அம்பலப்படுத்திய போது மத்திய கணக்கு தணிக்கையாளராக இருந்தவர் வினோத் ராய். பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், ‘ஒரு கணக்காளன் மட்டும் அல்ல' என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தில் மேற்கண்ட ஊழல்கள் பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் மன்மோகன் சிங் மீது குறை கூறி இருக்கிறார். இந்த புத்தகம் வருகிற 15-ந் தேதி வெளியாக இருக்கிறது.
வினோத் ராய் பேட்டி
இந்த நிலையில் வினோத் ராய் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மன்மோகனுக்கு வழியே இல்லை..
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரங்களில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க மன்மோகன் சிங்குக்கு எந்த வழியும் இல்லை. 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் மன்மோகன் சிங் பதில் எழுதி இருக்கிறார்.
பிடிவாதம்
நான் எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து ஒரு பதில் கூட கிடையாது. ஒரு சமயம் நான் அவரை சந்தித்த போது, என்னிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள் என கருதுகிறேன்'' என்று கூறினார். அந்த சமயத்தில் அவர் ஆ.ராசாவுக்கு ஒரு நாளைக்கு இருமுறை பதில் அளித்தார்.
அவர்தான் பொறுப்பாளி
அப்படி இருக்கும் போது, எடுக்கப்பட்ட முடிவுகளில் அவர் எப்படி பொறுப்பாளி ஆகாமல் இருக்க முடியும்? நிதி ரீதியாக மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும், செய்யும் பணியிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டணி ஆட்சிக்காக..
கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட முடியாது. அதுதான் அவருக்கு மிகுந்த கவலையாகிவிட்டது.
அவர் சொல்லிக் கொடுத்த முறைதான்..
அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு செய்த முறை தவறானது என்று நவம்பர் 16-ந் தேதி மன்மோகன் சிங் என்னிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம், ‘‘சார் எங்கள் மதிப்பீடு சரியான முறையில் செய்யப்பட்டதுதான், அது நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முறைதான்" என்று பதில் அளித்தேன்.
இவ்வாறு வினோத் ராய் கூறினார்.