லிப்டுக்குள் சிக்கிக் கொண்ட மகாராஷ்டிர மாஜி முதல்வர்!
மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்டு அரை மணி நேரம் தவித்தார். அவரை தீயணைப்புப் படையினர் வந்து மீட்டனர்.
தெற்கு மும்பையில், உள்ள ரவீந்திரா மேன்சன் என்ற இடத்தில் சவானின் அலுவலகம் உள்ளது. அங்கு செல்வதற்காக பிருத்விராஜ் சவானும், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் தத்தும் சனிக்கிழமை மாலை வந்தனர். பின்னர் தரைத் தளத்திலிருந்து மேலே செல்வதற்காக லிப்ட்டில் ஏறியுள்ளனர்.
ஆனால் லிப்ட் கிளம்பி 5 நிமிடமாகியும் முதல் மாடிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சவானின் உதவியாளர் கஜானன் அவல்கர், கட்டட பாதுகாவலர்களை அழைத்தார். அவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து லிப்ட்டுக்குள் சிக்கியிருந்த சவானையும், சஞ்சய் தத்தையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
கிட்டத்தட்ட அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக லிப்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட இருவருக்கும் எதுவும் ஆகவில்லை.