ஜார்கண்ட் தேர்தல்: முன்னாள் முதல்வர்கள் அனைவருக்கும் கரி பூசிய மக்கள்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் அனைவரும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியின் முதல்வராக உள்ள ஹேமந்த் சோரன் தற்போது டும்கா தொகுதி எம்.எல்.ஏ ஆவார். ஆனால் தனது தொகுதி மக்கள் மனநிலை தனக்கு எதிராக இருப்பதை புரிந்துகொண்ட சோரன், பர்கெய்ட் தொகுதியிலும் போட்டியிட்டார்.
எதிர்பார்த்தை போல பர்கெய்ட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சோரன், டும்கா தொகுதியில் பாஜக வேட்பாளரைவிட பின்தங்கியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் உதயமான பிறகு முதலாவது முதல்வராக பதவி வகித்த பாபுலால் மரான்டி, கிரிடிஹ் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். அதே நேரம் அவர் போட்டியிட்ட தன்வார் என்ற மற்றொரு தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலுள்ளார்.
மூன்று முறை முதல்வராக இருந்தவரும், பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமுமான, அர்ஜுன் முண்டா, தான் போட்டியிட்ட, கரஸ்வான் தொகுதியில் 3 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வரும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் சிபிஐயால் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு உள்ளானவருமான மது கோடா, 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், தான் போட்டியிடும் மஜ்கோன் தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
இப்படி முதல்வர்களாக இருந்தவர்கள் எல்லோரையும் ஜார்கண்ட் கைவிவிட்டுவிட்டது. எனவேதான் தற்போதைய முதல்வர் ஹேமந்த்தின் தந்தையும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மற்றும் முன்னாள் முதல்வருமான சிபுசோரன் இம்முறை போட்டியிடவில்லை போலும்.