முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங். பாஜகவில் இணைகிறார்
டெல்லி: முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.கே. சிங் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆர்.கே.சிங், இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) யில் இருந்தவர். 1975ம் வருட பேட்ச்சில் பீகாரில் இருந்து தேர்வானவர்.
1990ம் ஆண்டு அத்வானி அயோத்திக்கு ரத யாத்திரை சென்ற போது பீகாரில் கைது செய்யப்பட்டார். அத்வானி கைது செய்யப்பட்டதற்கு ஆர்.கே. சிங் முக்கிய காரணமாக இருந்தார். அவர் கடந்த 2011 ஜூலை1ம் தேதியில் இருந்து 2013 ஜூன் 30 வரை உள்துறைச் செயலராகப் பணியாற்றியவர்.
இவர் கடந்த ஜூன் மாதம் உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் இன்று முறைப்படி பாரதீய ஜனதா கட்சியில் இணைகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக பீகாரில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.