சர்தார் படேல் சிலைக்கு பேனா, பொம்மை துப்பாக்கி மாலை.... குஜராத் மாஜி போலீஸ் அதிகாரியால் சர்ச்சை
சூரத்: குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பேனா மற்றும் பொம்மை துப்பாக்கியால் ஆன மாலையை போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா அணிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இஷ்ரத் ஜஹான், சோராபுதீன் ஷேக், துள்சி பிரஜாபாதி போலி என்கவுண்ட்டர் வழக்குகளில் 2007-ம் ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டவர் வன்சாரா. இந்த போலி என்கவுண்ட்டர் நடத்தப்பட்ட போது, குஜராத் போலீஸின் குற்றப் பிரிவில் துணை ஆணையராக இருந்தவர் வன்சாரா.
துப்பாக்கி மாலை
கடந்த 2015-ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் வன்சாரா. அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அண்மையில் தளர்த்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் வன்சாரா. இந்த பயணத்தின் போதுதான் சூரத்தில் சர்தார் படேல் சிலைக்கு பேனாக்கள் மற்றும் பொம்மை துப்பாக்கியால் ஆன மாலையை அவர் அணிவித்தார்.
இதுக்குதான் மாலை....
இது குறித்து வன்சாரா கூறுகையில், நாடு விடுதலை அடைந்த போது 665 சமஸ்தானங்களாக இருந்தது இந்தியா. இவை அனைத்தும் தமது பேனா முனையால் போட்ட உத்தரவுகளால் ராணுவ பலத்தால் இணைத்து இந்தியாவை உருவாக்கியவர் சர்தார் படேல். ஆகையால் பேனா மற்றும் பொம்மை துப்பாக்கிகளால் சர்தார் படேல் சிலைக்கு மாலை அணிவித்தேன் என்றார்.
படேல்கள் எதிர்ப்பு
ஆனால் வன்சாராவின் இந்த செயலுக்கு படேல் சமூகத்தினரும் காங்கிரஸ் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். படேல் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் வன்சாரா செயல்பட்டு வருகிறார்; சர்தார் படேல் ஒருபோதும் வன்முறையை விரும்பியல்லை; அவர் சமாதானத்தை நேசித்தவர் என கூறி வன்சாரா அணிவித்த பேனா, பொம்மை துப்பாக்கி மாலையை அகற்றியுள்ளனர்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
மேலும் இடஒதுக்கீடு கோரி போராடி வரும் படேல் சமூகத் தலைவர்களில் ஒருவரான நிஹில் சவானி, சர்தார் படேலை வன்சாரா அவமதித்துவிட்டார். எங்களது சமூகத்தின் உணர்வுகளையும் அவர் காயப்படுத்திவிட்டார். இந்த செயலுக்காக வன்சாரா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியும் வன்சாரா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளது.