விண்வெளி துறையின் வித்தக தமிழர் நம்பி நாராயணன்.. கேரள போலீசால் பட்ட அவமானங்கள் கொஞ்சமா?
Recommended Video
டெல்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள போலீசார் பொய் வழக்கு புனைந்து கைது செய்துள்ளதை உச்சநீதிமன்றம் இன்று உறுதிப்படுத்திவிட்டது.
இந்திய விஞ்ஞான உலகில் இன்று ஒரு பொன் நாள் என்றால் அது மிகையில்லை.
இதற்கு முன்பாக, யார் இந்த நம்பி நாராயணன், ஏன் அவர் மீது கேரள போலீசார் மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்கள் என்று பார்த்தால், இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் நெருப்பாற்றில் நீந்தியது எப்படி என்பது உங்களுக்கும் தெரியும்.
விஞ்ஞான விதை
1990களில், இந்திய விண்வெளித்துறை, வளர்ச்சி பெறத் தொடங்கியது. இப்போது இந்தியா உலக எலைட் விஞ்ஞான சமூகத்தில் இடம்பிடிக்க அப்போதுதான் விதை தூவப்பட்டது. அதில் இரு தமிழர்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கினர். ஒருவர், அப்துல் கலாம். மற்றொருவர்தான் நம்பி நாராயணன். திரவ எரிபொருட்களை பயன்படுத்தும் ராக்கெட் இன்ஜின்களை உருவாக்கினார்.
[Read This: 17 வருட போராட்டம்.. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..சுப்ரீம்கோர்ட் அதிரடி]
இன்ஜின்கள்
இவர் உருவாக்கிய இன்ஜின்களுக்கு, விக்ரம் சாராபாய் நினைவாக விகாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டதே ஆம்.. அந்த இன்ஜின் விகாஸ்தான். இன்றும் கூட நம்பி நாராயணன், குழு உருவாக்கிய பல இன்ஜின்கள்தான் உள்நாட்டு பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்படுகிறது.
பெரும் குற்றச்சாட்டு
இப்படிப்பட்ட நாடு கண்ட ஒரு மாபெரும் விஞ்ஞானி மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. 1994ம் ஆண்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை விற்பனைசெய்ததாக, 1994 நவம்பர் 30ம் தேதி, கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். சந்திரசேகரன், எஸ்.கே.ஷர்மா ஆகிய கான்ட்ராக்டர்கள் உட்பட 6 பேர் அப்போது கைது செய்யப்பட்டனர்.
பெரும் கொடுமைகள்
50 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார் நம்பி நாராயணன். தேச விரோத குற்றச்சாட்டு என்பதால் காவல்துறை எப்படி இவரை கையாண்டு இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. கேரள மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் நம்பி நாராயணனை கடுமையாக துன்புறுத்தினர்.
வழக்கின் கறை
நல்லவேளையாக இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு, குற்றவியல் நீதிபதி மாற்றம் செய்தார். சிபிஐ விசாரணையில்தான், இந்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்தது. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது கேரள போலீசால் தெளிக்கப்பட்ட கறை நீங்கவில்லை. நம்பி நாராயணனுக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் கொடுக்காமலே, 2001ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
விடவில்லை விஞ்ஞானி
இந்த அவமானத்தை சும்மா கடந்து செல்ல தயாராக இல்லை நம்பி நாராயணன். தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாக கேரள காவல்துறை உயரதிகாரிகளான முன்னாள் டிஜிபி, சிபி மேத்யூஸ், முனனாள் எஸ்.பிக்கள் ஜோசுவா, விஜயன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்குமாறு மற்றும் நஷ்டஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வெற்றி
17 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திய நம்பி நாராயணனுக்கு இன்றைய தீர்ப்பு ஆறுதல் அளிக்கும் என நம்பலாம். கேரள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு. இறுதியில், வாய்மையே வென்றது.