ஷீனா கொலை வழக்கு.. பீட்டர் முகர்ஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை...என்ன சொன்னாரோ!
டெல்லி: ஷீனா போரா கொலை வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தை பீட்டர் முகர்ஜியிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, ஷீனா போரா கொலை தொடர்பாக நடந்தது என்ன என்பது குறித்தும், தனது மனைவி இந்திராணி முகர்ஜியுடன் இந்தக் கொலை தொடர்பாக நடந்த உரையாடல்கள் குறித்தும், சிபிஐ அதிகாரிகளிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் குறித்தும் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறப்பட்டன.
டெல்லியில் உள்ள மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை நடத்த கோர்ட் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
அடுத்து திங்கள்கிழமையன்று பீட்டர் முகர்ஜியை சிபிஐ அதிகாரிகள் மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். அன்றுடன் அவரது போலீஸ் காவல் முடிவடைகிறது.
ஷீனா கொலை வழக்கில் நவம்பர் 19ம் தேதி பீட்டர் முகர்ஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்த கொலை குறித்து முன்பே தெரியும் என்ற தகவலைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அன்று முதல் தொடர்ந்து அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
ஷீனா கொலை வழக்கு மட்டுமல்லாமல், அவரும், இந்திராணி முகர்ஜியும் சேர்ந்து செய்த பல்வேறு பண மோசடிகள், ஷீனா போராவின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்டவை, குடும்ப உறுப்பினர்களிடையே நிலவி வந்த உறவுகள், ஷீனா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சு வழக்குகள் குறித்தும் பீட்டரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணையின்போது பீட்டர் நிறைய பொய் பேசுவதாக சிபிஐ கருதியது. இதையடுத்தே உண்மை கண்டறியும் சோதனைக்கு அது கோரிக்கை விடுத்தது.