மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே நாக்கை வெட்டினால் ரூ1 கோடி பரிசு அறிவிப்பால் பரபரப்பு
மதச்சார்பின்மை பேசுவோரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே நாக்கை வெட்டினால் ரூ1 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.
பெங்களூரு: மதச்சார்பின்மையாளர்களை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டேவின் நாக்கை வெட்டினால் ரூ1 கோடி பரிசு தருவோம் என கர்நாடகவின் ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் குருசாந்த் பட்டேதார் அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது சித்தாந்தத்துக்கு எதிராக பேசினால் தலையை வெட்டுவது, நாக்கை துண்டிப்பது, பரிசுத் தொகை அறிவிப்பது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்துத்துவா அமைப்பினரின் இத்தகைய அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மதச்சார்பின்மை பேசுபவர்களை, பெற்றோர்கள் யார் என்பதை தெரியாதவர்கள் என மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே விமர்சித்திருந்தார். அவரது விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.
இதனிடையே இந்துத்துவா அமைப்புகளின் பாணியிலேயே கர்நாடக ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் குருசாந்த் பட்டேதார், மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டேவின் நாக்கை வெட்டி வந்தால் ரூ1 கோடி பரிசுத் தொகை தருவேன் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜும் ஆனந்தகுமார் ஹெக்டேவை கடுமையாக சாடியிருந்த்து குறிப்பிடத்தக்கது.