விமான கடத்தலுக்கு எங்கள் அரசின் சில தவறுகளே காரணம் என வாஜ்பாய் வருந்தினார்- 'ரா' மாஜி தலைவர்
டெல்லி: நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்துக்கு தங்களது அரசின் சில தவறுகளே காரணம் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதாக அவரது சிறப்பு ஆலோசகராக இருந்தவரும் 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவருமான துலாத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து பாஜக அரசு இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் புதிய அணுகுண்டாக துலாத் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ரா உளவு அமைப்பின் தலைவராகவும் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர் ஏ.எஸ். துலாத். அவர் எழுதியுள்ள 'வாஜ்பாய் காலத்தில காஷ்மீர் ' என புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு துலாத் பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் துலாத் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:
குஜராத் கலவரம்
2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின்னர் 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை தனது அரசு கையாண்ட விதம் குறித்து வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார் குஜராத் கலவரத்திற்கு தமது அரசின் தவறே காரணம் என்று பிரதமராக இருந்த வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். தங்களின் சில தவறுகளாலேயே குஜராத் கலவரம் ஏற்பட்டது எனவும் கூறினார். அப்போது குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது.
பிரிஜேஷ் மிஸ்ரா
தமக்கு முதன்மை செயலாளராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவிற்கு வாஜ்பாய் அதிக முக்கியத்துவம் அளித்தது அத்வானிக்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட இது மிக முக்கிய காரணமாக இருந்தது.
பாக்.பேச்சு தோல்வி
2001ஆம் ஆண்டு ஆக்ராவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் போது, தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அத்வானி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பிடம் வெளிப்படையாக பேசினார். இது முஷாரப்பிற்கு அதிர்ச்சி அளித்ததால் அவர் பேச்சுவார்த்தையை பாதியிலேயே முடித்துக் கொண்டதால் அது தோல்வியில் முடிந்தது. வாஜ்பாய் அரசுக்கு இது நெருக்கடியாக அமைந்தது.
கந்தகார் விமானக் கடத்தல்
1999-ம் ஆண்டு கந்தகார் விமான கடத்தல் தொடர்பாக ‘ரா' உளவுப் பிரிவு ஆலோசனை நடத்தியபின்னர், இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்ய முடிவுசெய்யப்பட்டது. பின்னர் மத்தியஅரசு எடுத்த முடிவு தவறு என்று உணர்ந்த அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா ராஜினாமா செய்யப்போவதாக கூறினார். விமானம் டிசம்பர் 24-ம் தேதி கடத்தப்பட்டபோது அமிர்தசரஸில் அது நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானம் அங்கிருந்து வெளியே புறப்படுவதைத் தடுக்க உடனடியாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. விமானம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க யாரும் மிகவும் விருப்பத்துடன் இல்லை; மிகவும் குழப்பமான நிலையில், தனிப்பட்ட நிலையில் செயல்பட்ட பஞ்சாப் மாநில போலீசாருக்கு போதுமான தகவல்களும் வழங்கப்படவில்லை.
காஷ்மீர் விவகாரம்
முப்தி முகமதுவை துணை ஜனாதிபதியாகவும், ஒமர் அப்துல்லாவை காஷ்மீர் முதல்வராக ஆக்கவும் வாஜ்பாய் விரும்பினார். ஆனால் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்புடன் முப்தி முகமதுவுக்கு தொடர்பு இருந்ததாலேயே அவரை காஷ்மீர் முதல்வராக்க வாஜ்பாய் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.